பறவையைக் கொன்றால் மறுபடி பறக்குமா!

புலால் உண்பது பொறிகளை அழிக்கும்!
புன்புலால் யாக்கை வளர்ப்ப தற்காக
புலால் உண்பதால் கெடுதியே சிறக்கும்!
தாவர உணவே சாத்வீக உணவு!
அதுவே இயற்கையாய் அமைந்த உணவு !
ஆருயிர் கொல்லாத அறிவார்ந்த உணவு!

ஆமாம்..அதுசரி..!அப்படி என்றால்
தழைத்து வளரும் தாவரங்க ளான
மரமும் – நெல்லும் – மாடுண்ணும் புல்லும்
உணர்ந்து பார்த்தால் உயிர்கள் தானே !

தாவர உயிர்கள் தம்மை அழித்து
நா- அரும்பெல்லாம் நத்திடச் சுவைக்கும்
அந்தச் செயலும் அகிம்சைக்கு எதிராய்
ஆவது தானே ..? அதுகுற்றம் இல்லையா..?

ஜீவ காருண்யம் என்று பார்த்தால்
தாவ ரங்களை அழிப்பதும் பாவம்!
தாவ ரங்களை உண்பதும் பாவம் !
என்பதில் அர்த்தம் எதுவும் இல்லையா!
இல்லை என்கிறார் எம்பெரு மானார்!

ஓரறி வுடைய உயிர்களுக் குள்ளும்
ஜீவ விளக்கம் உண்டென் றாலும்
பூக்கள்,காய்கள்,கனிகள் ,கிழங்குகள்
தழைகள் கீரைகள் வித்துகள் யாவும்
உயிர்கள் தோன்றும் இடங்களே அன்றி
அவைகளே உயிராய்க் காண்பது இல்லை!
அவற்றில் தனியாய் உயிரும் இல்லை!

மண்ணும் நீரும் வித்தும் சேர்ந்தே
உயிர்கள் தோன்றும் உலகில்;ஆதலால்
அவற்றைப் பறிப்பதும் உண்பதும் அவற்றை
ஊறு செய்வதாய் ஒருபோதும் எண்ணற்க!

கைவிரல் நகத்தை வெட்டும் போதும்
காணும் முடியைச் சிரைக்கும் போதும்
ஏதும் துன்பம் ஏற்படு வதுண்டோ..?
மீண்டும் அவைதான் முளைக்குமே அன்றி
யாண்டும் துயரம் விளைவதே இல்லை!

அதுபோல் தாவர உயிர்களைப் பறித்தால்
அவையும் துன்பம் அடைவதே இல்லை!
அதுமட்டும் அன்று ! அவற்றின் வித்தை
நன்னிலம் ஒன்றில் நாமே விதைத்து
மேலும் மேலும் உற்பத்தி செய்யலாம்!

கோழி கழுத்தை வெட்டினால் முளைக்குமா!
ஆடு மாடுகள் அறுத்தால் தழைக்குமா!
பறவையைக் கொன்றால் மறுபடி பறக்குமா!
ஆகவே..தாவர உணவே சிறந்தது!

அதனால் உயிர்க் கொலை மட்டுமே கொடியது!
அறிவீர் என்கிறார் அருள்நிறை வள்ளலார்!

அறிவோம் உலகீர்! அணிதிரள் வீரே!
புரியோம் உயிர்க்கொலை! புரிவோம் சன்மார்க்கம்!
நெறியில் நிற்போம்! நிலத்தில் வாழும்
அரிய கலைகள் அருட்பெருஞ் சோதி
ஆண்டவ ரிடத்தில் அனைவரும் கற்போம்!

Comments

Popular posts from this blog

யார் அந்தத் தனஞ்செயன்..?

திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழா

ஆயத்தம் செய்வோமா..?