Posts

Showing posts from 2011

நல்ல பிள்ளையாக..!

ஞான சபைத் தலைவனுக்கு  நல்ல பிள்ளையாக  நாமிருக்க வேண்டாவா..? வேண்டும்தானே! முதலில் .. வடலூர் பெருமானின்  வாழ்வியல் கருத்துகளை  மனத்தில் இருத்தி  வாயுற வாழ்த்துவோம்  வாருங்கள்!      

மனிதனை ஆட்டுவிக்கிறது மனம்..!

மனமெனும் ஓர் மடப்  பயல்-- பன்முகம் சேர்மனம் என்கிற பரியாசப்   பயல்--- விரிந்த மனம் என்னும் சிறிய விளையாட்டுப் பயல்---  பாய்மனம் என்னும் முரட்டுப் பயல்---  மயங்கு புத்தி  என்னும் உலக வழக்காளிப் பயல்--- கலையறியாச் சித்தம் என்னும் கனமோசப் பயல்-- அகங்காரம் என்னும் பொல்லா அடவாதிப் பயல்--- இப்படி---- ஏழு வடிவங்களில் மனிதனை ஆட்டுவிக்கிறது மனம் என்று பட்டியல் இடுகிறார் வள்ளல் பெருமான்! மனம் என்னும் மதம் பிடித்த யானையை அடக்கும் அங்குசம்தான்  எது..? அறிந்துகொள்ள வாருங்கள்.. வள்ளல்  பெருமான் வழியில்..!

சாதித்துக் காட்டிய சரித்திரப் புருஷர்!

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து.... என்று  உருகித் திளைப்பார் வள்ளலார். நம் கவிஞர்களும் ஞானிகளும்   பெரும்பாலும்  அழுதவர்கள்தான்! அழுதால் உன்னைப் பெறலாமே என்பார்.. மாணிக்கவாசகர். மார்பாரப் பொழிகண்ணீர்.. மழைவாரும்  இணைவிழிகள்!  இது-- அப்பர் பெருமானின்     அருள் பிழியும் தோற்றம்! நெஞ்சு பொறுக்குதில்லையே..என்று  நாட்டுக்காக  அழுதார்   கவியரசர் பாரதியார்! இதுபோல் அழுதுள்ளனர்-- இன்னும் பலர்!  ஆனால்...  வள்ளல் பெருமான் ஒருவர்தான்   அழுகையை அர்த்தப் படுத்தினார்!! அழுதுநிற்பதால் பயன்என்ன? அழுவதே தீர்வாகுமா? அழுவது  மட்டுமே அருளாகுமா? மண்ணுலகதனில் உயிர்கள்தாம்  வருந்தும் வருத்தத்தைக்  கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்  கணமும் நான் சகித்திட மாட்டேன்..! ---என்றெல்லாம்   வள்ளல் பெருமான்  நைந்துயிர்வாடி நவின்றதோடு நின்றாரா? இல்லை--இல்லை--! இல்லவே இல்லை! அதுதான் அவர்தம் தனித் தன்மை! உயிர்   இரக்கம்-அன்ன விரயம்-- சாலை -சபை என்று  சாதித்துக் காட்டிய 

பறவையைக் கொன்றால் மறுபடி பறக்குமா!

Image
புலால் உண்பது பொறிகளை அழிக்கும்! புன்புலால் யாக்கை வளர்ப்ப தற்காக புலால் உண்பதால் கெடுதியே சிறக்கும்! தாவர உணவே சாத்வீக உணவு! அதுவே இயற்கையாய் அமைந்த உணவு ! ஆருயிர் கொல்லாத அறிவார்ந்த உணவு! ஆமாம்..அதுசரி..!அப்படி என்றால் தழைத்து வளரும் தாவரங்க ளான மரமும் – நெல்லும் – மாடுண்ணும் புல்லும் உணர்ந்து பார்த்தால் உயிர்கள் தானே ! தாவர உயிர்கள் தம்மை அழித்து நா- அரும்பெல்லாம் நத்திடச் சுவைக்கும் அந்தச் செயலும் அகிம்சைக்கு எதிராய் ஆவது தானே ..? அதுகுற்றம் இல்லையா..? ஜீவ காருண்யம் என்று பார்த்தால் தாவ ரங்களை அழிப்பதும் பாவம்! தாவ ரங்களை உண்பதும் பாவம் ! என்பதில் அர்த்தம் எதுவும் இல்லையா! இல்லை என்கிறார் எம்பெரு மானார்! ஓரறி வுடைய உயிர்களுக் குள்ளும் ஜீவ விளக்கம் உண்டென் றாலும் பூக்கள்,காய்கள்,கனிகள் ,கிழங்குகள் தழைகள் கீரைகள் வித்துகள் யாவும் உயிர்கள் தோன்றும் இடங்களே அன்றி அவைகளே உயிராய்க் காண்பது இல்லை! அவற்றில் தனியாய் உயிரும் இல்லை! மண்ணும் நீரும் வித்தும் சேர்ந்தே உயிர்கள் தோன்றும் உலகில்;ஆதலால் அவற்றைப் பறிப்பதும் உண்பதும் அவற்றை ஊறு செய்வதாய் ஒருபோதும் எண்

ஆயத்தம் செய்வோமா..?

Image
ஒரு மனிதர்.. ஒரு மாமனிதர் .. உடம்போடு உள் நுழைந்து மறைந்த  ஓரிடம்... தமிழ்நாட்டில் தான்  உள்ளது..!  அவ்விடம்.... பெருமான் திருவறைக்குள்.. திருக்காப்பிட்டுக் கொண்டு ஜோதிமயமாய் இறைவனோடு இரண்டறக் கலந்து.. ஞான சித்தி பெற்ற.. சித்தி வளாகம் ஆகும்! சித்தி வளாகத்தைச் சித்தத்தால் தொழுது சிந்தனையை முறைப்படுத்தினால்.. ஆன்ம ஒளி நமக்கு அறிமுகமாகும்..! அறிமுகம் நம்மைப் புதுமுகம் ஆக்கும்! ஆயத்தம் செய்வோமா..? 

அவரைப் பின்பற்றுவோம்..!

Image
மும்மொழிப் பாடசாலை...தமிழ்  நாட்டில்  முதன்முதலில் ஏற்படுத்தியவர் ... முதியோர் கல்வியை முதன்முதலில்  ஏற்படுத்தியவர்...   முற்போக்குச்  சிந்தனையின்  மூல புருஷராக விளங்கிய  முத்தமிழ்   ஞானி..  வள்ளல் பெருமான் என்பதை நினைக்கையில்  இதயமெலாம் பூரிப்பும்  புத்துணர்வும் எழுகிறது! அதே சமயம் --- அவரைப்    பின்பற்றுவதில்  எவ்வளவு பின்தங்கி விட்டோம்  நாமென்று நினைக்கையில்  வேதனை நெஞ்சை விழுங்குகிறது! அவரைப் போன்ற சீர்திருத்தவாதி  ஆருமில்லை  அவர்தம் நூற்றாண்டில்! அகிலம் கண்விழிக்க  அவரைப் பின்பற்றுவோம்..!     

ஒரு நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்..?

ஒரு  நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளல் பெருமான்  ஒரு வரையறை செய்கிறார்.. ஒவ்வொரு ஆட்சியாளரும்  இந்த  வரைமுறை பற்றி  ஒருமுறையேனும் சிந்தித்தால்.. மாபெரும் மாற்றங்கள் மலரும்! மனம் வைப்பார்களா  மனிதர்கள் என்பதுதான்  மகத்தான  கேள்வியாக இருக்கிறது..! பெருமான் பகர்கிறார்: ஒரு நாட்டில்.. பறிபடுவது...பூவாக இருக்கவேண்டும்..!  சிறைப் படுவது..புனலாக இருக்கவேண்டும்..!  அலைபடுவது.. காற்றாக..இருக்கவேண்டும்..!  கடினம் உடையது.. கல்லாக இருக்கவேண்டும்..!  வடுப் படுவது..மாவாக (மாமரமாக) இருக்கவேண்டும்..!  குலைப் படுவது.. வாழையாக..இருக்கவேண்டும்..!  மதுவுண்பது..வண்டாக இருக்கவேண்டும்..!  அடிபடுவது பந்தாக..இருக்கவேண்டும்..!  கட்டிக் கிடந்து உண்பது..பரியாக (குதிரையாக)..இருக்கவேண்டும்..!  குத்துப் படுவது.. நெல்லாக இருக்கவேண்டும்..!  போரில் படுவது..நெற்கதிராக   இருக்கவேண்டும்..!   வலை படுவது..வயலாக இருக்கவேண்டும்..!  குறைபடுவது..மாதர் இடையாக இருக்கவேண்டும்..!  தரித்திரமே ..தரித்திரப்படுவதாக  இருக்கவேண்டும்..!  துக்கமே ..துக்கப் படுவதாக இருக்கவேண்டும்..!  பொய

திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழா

Image
திருவருட்  பிரகாச   வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழாவில் கங்கை மணிமாறன் பட்டிமன்ற நடுவராக... திருவருட்  பிரகாச   வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழாவில் கங்கை மணிமாறன் பட்டிமன்ற நடுவராக...    அறக் கட்டளையின் "சாலைச் சோலை" திட்டத்தின் கீழ் மரக் கன்று நடுகிறார் பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் திருமிகு. எஸ் .பவுன் ராஜ் அவர்கள்  அறக் கட்டளையின் "சாலைச் சோலை" திட்டத்தின் கீழ் உள்ளூர்ப் பள்ளியில் மரக் கன்று நட்டு நீரூற்றுகிறார் கங்கை மணிமாறன் 

சகல துன்பங்களுக்கும் சரியான காரணம்...

Image
 அன்னதானத்தில் சில காட்சிகள்  உலகத்  துன்பங்களுக்கு  எல்லாம் உண்மையான காரணம் எது என்று உலக ஞானிகள் ஒவ்வொருவரும் உயிரைப் பிசைந்து ஆராய்ச்சி செய்தார்கள்! சகல   துன்பங்களுக்கும் சரியான காரணம்... ஆசையே என்று அனைவரும் முடிவு சொன்னார்கள்! ஆசையே துன்பங்களுக்குக் காரணம் அதை விட்டொழியுங்கள் என்று உயிர்வலிக்க உபதேசித்தார்கள்! வள்ளலார் அதை மறுக்கவில்லை! உண்மைதான் என்று ஒப்புக் கொள்கிறார்! ஆனால்..அதே சமயம் அதைவிட அழுத்தமான .. அடிப்படையான காரணம் ஒன்று உண்டு என்று கண்டுபிடிக்கிறார் பெருமான்! சகல   துன்பங்களுக்கும் சரியான காரணம்... அதுதான் பசி என்பது! பசிதான் படரும் துன்பங்களுக்கு எல்லாம்.... தொடரும் கொடுமைகளுக்கு எல்லாம் காரணம் என்று பெருமான் அழுத்தமாய் நம்பினார். ஆசையற்றவர்கள் அகிலத்தில் உண்டு! பாரில் எங்கும் பசியற்றவர்கள் உண்டா! அப்பர் பெருமானுக்கு ஆசை இல்லை! ஆனால்.. பசி இருந்தது! ஆண்டவனே கட்டுச் சோறு கொண்டு வந்தான்! சுந்தரருக்கு ஆசை இல்லை! ஆனால் பசி இருந்தது! ஆண்டவனே பிச்சை ஏற்று  வந்து ஊட்டினான்! பட்டினத்தாருக்கு ஆசை இல்லை! பசி இருந்தது! என் பசிக்கு  

அருளாளர் பண்பு!

Image
அடக்கம் அமரருள் உய்க்கும் என்றார்  அறிஞருள் அறிஞர் வள்ளுவனார்! கைகளை வீசி நடக்கவும் பயந்து  கைகளைக் கட்டியே நடந்த பெருமான்  அடக்கத்தின் பேருருவமாகத் திகழ்ந்தவர்! கருங்குழியில் அவர் வதிந்த போது, தண்ணீரால் விளக்கெரிந்த அற்புதம் நிகழ்ந்தது! அடியார்கள் அந்த அருட்திறத்தில்   நெகிழ்ந்து  பெருமானை வியந்து போற்றத் தொடங்கினர்.  எம்பெருமானோ..இவ்வாறு பாடினார்! "நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது : சந்நிதியின் முன்னே    ..!"  நெய் விளக்கு என்னால் ..என் அருட் திறத்தால் ..எரியவில்லை! அது அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருளால் .. அவர் சந்நிதியின் முன்னே எரிந்தது! ---என்பதை  அழுத்தமாய் எடுத்துக் காட்டுகிறார் பெருமான்!  என்னே அவர்தம் அடக்கம்!  தன்னை வியத்தல் என்பது மனிதப் பண்பு!   தன்னை மறத்தல் தானே ..அருளாளர் பண்பு!

நல்லவர்களே ..வாருங்கள்!

Image
கடவுளை  அனுபவமாகப்  பார்த்தவர்  வள்ளலார். அனுபவித்துப் பார்த்தவர் வள்ளலார். அனைத்து உயிர்களிலும் பார்த்தவர் வள்ளளார்! ஊதிப் பழுத்த கனியன்று: நிழல் கனிந்த கனி என்று இயற்கையில் இறைவனைத் தரிசித்தவர் அவர்! இயற்கையை வியக்கும் எவரும் இறைவனைக் காணலாம் என்பதை விளக்க வந்தவர் அவர்! இயற்கை எவரையும் தனியாய்ப் பிரிக்கவில்லை! பிரித்தவன் மனிதன் தான் என்பதை உணர்ந்தவர் அவர்! கலை உரைத்த  கற்பனைகள் நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கங்களை மண்மூட வேண்டும்   என்று கடுமை காட்டியவர் அவர்! அவர்போல் ஒருவர் வழி காட்டினால் போதும்! நம்மைப் போன்றவர்கள் நடந்து காட்டலாம்! நல்லவர்களே  ..வாருங்கள்! வல்லவர் வள்ளலாரின் வழியில் வாழ்ந்து காட்டுவோம்!

அருட்பாவால் ஆண்டவர்!

நாம் வள்ளல் என்று ஒருவரைச் சொன்னால் அவரிடம் கையேந்துகிறோம் என்று பொருள்! ஆம்.. வள்ளலாரிடம் நாம் கையேந்துகிறோம்..! எதற்காக..! பொருள் வேண்டும் என்பதற்காக அன்று! அருள் வேண்டும் என்பதற்காக! அதுவும் நாம் மட்டுமே  வாழ அன்று! நம்மைச் சார்ந்தவர்களும் - நம்மைச் சார்ந்து வாழும் பிற உயிர்களும் சமத்துவமாய் வாழ! அவரது வழியில் நின்று ஆன்ம நேயம் சூழ! அவரது வழியில் நிற்கவும் அவர் அருள் வேண்டும்! அவரே அருட்பெருஞ்சோதி ஆண்டவரைக் கண்டவர்! எம்மை அருட்பாவால் ஆண்டவர்! ஆகவே அவரிடம் கையேந்துவோம்! அவர் துணையோடு ஆன்ம நேய ஜோதியை ஏந்துவோம்    !    

சமயம் கடந்த ஞானி!

  வள்ளலாருக்கு முன்பும் அருளாளர்கள் இருந்தனர்.      பக்திப் பனுவல்கள் புனைந்தனர்.      பாடல்கள் இசைத்தனர்.      பலதலம் சென்றனர்.      பயணம் செய்தனர்.      பரிவாய் நடந்தனர்.     ஆனாலும் ..      வள்ளல் பெருமான் அவர்களிலும் பெரிதும்  மாறுபட்டவர்.      அவர்களில் பெரும்பாலோர் உபதேசித்தனர்.      பெருமான் செயலில் இறங்கினார்.      அவர்கள் அடியார்கள் சிலருக்கு  உணவு தந்தனர்.     பெருமான்.. பசித்திருப்பவர்கள் அனைவருக்கும்     உணவு படைக்கவேண்டும் என்று துடித்தார்.    பசிக் கொடுமையை எவரும் விரித்துரைக்க முடியாத அளவுக்கு விரிவுரை செய்து அதைப் போக்குவதே முதல் பணியாகக் கொண்டார்!    ஞான சபைக்குள்ளே புறவினத்தார் --அதாவது புலால் உண்பவர் நுழையக் கூடாது என்று விதித்தவர் --     சாலைக்குள்ளே அந்தக் கட்டுப்பாடு கிடையாது :     எவர் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று மனித நேய விதி செய்தார்.     இரைப்பையை நிரப்பி விட்டுத்தான் இதயத்தோடு பேச வேண்டும் என்பது  வள்ளல் பெருமானின் சன்மார்க்கச் சட்டம்.     அதை நிறைவேற்றவேண்டிய  பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது. இதில் மதமோ சாதியோ குறுக்கிடவே முடிய

அன்பு காட்டுவோம் வாருங்கள்!

     இந்த நூற்றாண்டில்கூட பேச முடியாத புரட்சிச் சிந்தனைகளை அந்த நூற்றாண்டில் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தவர் வள்ளலார். அனைத்து உயிர்களிடத்திலும் அன்புசெய்தல் என்பது அவர்தம் உயிர்க் கொள்கை.           வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று நெஞ்சார நெகிழ்ந்தார் அவர்.            பயிரைக் கண்டுதான் வாடினாரா..? களையைக் கண்டு வாடவில்லையா ?அதுவும் உயிர்தானே என்றார்-ஒரு நண்பர்.             நமக்குத்தான் பயிர்,களை என்ற வேறுபாடெல்லாம் !அவருக்கு எல்லாமே ஒன்றுதான் !அதுவாடினாலும் அவர் வாடுவார்!     ''ஓடும் செம்பொனும் ஒக்கவே "நோக்கினார் அல்லவா அப்பர் பெருமான்! உழவாரப் பணி செய்யும் போது உடைந்த ஓடுகளை அப்புறப் படுத்திக் கொண்டிருந்த அவருக்கு முன் ..பொற்காசுகளும் சிதறிக் கிடந்தன.அவற்றையும் குப்பையாகவே கருதி அவர் தூக்கி எறிய    வில்லையா!அதுபோலத்தான் வள்ளல் பெருமானுக்கு ..பயிராயினும் களையாயினும் ஒன்றுதான்!      "பணத்திலே சிறிதும் ஆசை ஒன்றிலேன் நான் !          படைத்த அப் பணங்களைப் பலகால் கிணற்றில் எறிந்தேன்  ;          குளத்திலும் எறிந்தேன்! கேணியில் எறிந்தனன் எந்தாய்!"-என்று

யார் அந்தத் தனஞ்செயன்..?

"செத்தாரைக் கண்டு சிறிதும் அழக் கூடாது! புலம்புதல் -கதறுதல் பொய்வேடம் புனைதல்- அறவே ஆகாது! இறந்தபோது எந்த ஆடையில் இருந்தார்களோ -- அந்த ஆடையை மாற்றக் கூடாது! 3 -ஆம் நாள் 16 -ஆம் நாள் சடங்குகள் தேவை இல்லை!" என்பதை வலியுறுத்துகிறார்-- பெருமான்! இதை மக்கள் மனம் கொள்ளும்படி அறிவியல் ரீதியாக-- உணர்வைக் காயப் படுத்தாமல் எப்படி எடுத்துரைப்பது ? விவாதிக்கலாமே!
Image
"பணத்தைப் புதைத்து வைக்கிறீர்கள்.. பிணத்தைப் புதைக்க மறுக்கிறீர்கள்! பிணத்தை எக்காரணம் கொண்டும் எரியூட்டக் கூடாது! அது கொலைக்குச் சமானம்!" -என்பதை வலியுறுத்தும் வள்ளல் பெருமான், பிணத்தில்.. "தனஞ் செயன் " என்னும் வாயு இருப்பதாகச் சொல்கிறார்! தனஞ் செயன் பற்றி சன்மார்க்கிகள் விவாதிக்கலாமே..!         கவிஞர் கங்கை மணிமாறன்

ஐயா ..நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்!

ஐயா ..நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்! திருவருட் பிரகாச வள்ளலார் என்னும் வெள்ளாடைத் துறவி-- பதினெட்டாம் நூற்றாண்டின் பரப்பளவில் ஆன்மிகத் தடத்தில் அழுத்தமான அடையாளத்தை ஏற்படுத்திய -ஓர் அபூர்வமான மாமனிதர்! ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும் தெரிவரிய திருமந்திர மொழியை எளியோர்க்கும் தெளிவாக்கிய திருவருட்பா சீலர்! கடவுளை ஒளிவடிவத்தில்கண்ட உயரிய சன்மார்க்கி! மனிதனைப் பிளந்த மத மாச்சரியங்களை சொற்களால் பிளந்த சூத்திரதாரி! கண்மூடி வழக்கங்கள் மண்மூடிப் போவதற்காக காடு மேடுகளைக் கடந்து வடலூரில் வதிந்து வாழ்வியல் போராட்டம் நடத்திய வார்த்தைச் சித்தர்! ஒன்பது வயதிலேயே உறுபொருள் கண்டு உலகச் சார்புகளை உடலாலும் உள்ளத்தாலும் நீத்துக் “கலகம்” செய்யவந்த காருண்ய மூர்த்தி! "கைவீசி நடப்பதும் கூட காற்றில் உலவும் உயிர்களைக் காயப்படுத்திவிடலாம் "என்னும் காரணத்தால்- கைகளைக் கட்டியே நடந்த கருணைத் தென்றல்! "ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் "என்று சாவியைக் கையிலே வைத்துக் கொண்டு சமுதாயத்தைக் கெஞ்சிய சரித்திர புருஷர் ! சித்துகள் தெரி

யாருமே அணைக்கவில்லை..!

எரிந்து கொண்டிருக்கிறது.. யாருமே அணைக்கவில்லை..! ---ஏழையின் வயிறு! இப்படி ஒரு புதுக் கவிதை எங்கோ படித்த நினைவு! இந்தத் தீ .. இன்று நேற்று ஏற்பட்டதா.. எத்தனையோ யுகமாய் மனித குலத்தோடு மரிக்காமல் தொடர்கிறது..இன்றுவரை! பசிக்காமல் வாழ்கிற பக்குவத்தைப் படைக்காமல் விட்டானே இறைவன் என்று பல நேரம் துடிக்கிறது--நெஞ்சு! எல்லாருக்கும் எல்லாமான வாழ்க்கை இல்லாமல் போய்விட்டதே என்று எரிகிறது--மனம்! எங்கும் இருக்கிறது இல்லாமை! இல்லாமை இல்லாமல் இல்லை ஒரு வாழ்க்கை! இல்லாதவர் படும்பாடு எழுத்தில் வருணிக்கவும் வார்த்தைகள் இல்லாமல்தான் போகிறது! இறைவன் படைப்பில் ஏனிந்தப் பாகுபாடு என்று ஏராளமாய்க் கேள்விகள் எழத்தான் செய்கின்றன --எப்போதும்! நாத்திகம் பேசி நாத்தழும்பேறிய வாய்களுக்கு முன் நற்றமிழ் பேசிட நரம்பில்லாமல் போகிறது! நலிந்து கிடக்கும் நாட்டின் வரலாறு மாற நாம்தான் ஏதாவது செய்ய வேண்டும்! பசிவயிற்றில் பால்வார்க்க தற்காலிகமாகவேனும் ஏதேனும் செய்யத்தான் வேண்டும் ! என் கிராமத்திலேயே என் விழிகள் காணும் பசிப் புலம்பல்-- இன்னும் மாறாமல்தான் இருக்கிறது சமூகம் என்பதைச் சொல்லாமல் சொ

கடவுள் உங்கள் கண்ணுக்குத் தெரிவார்..!

எங்கே கடவுள்..? எங்கும் இருக்கிறார் என்பது நீண்ட காலமாய் கேள்விப் பட்ட செய்திதான்! எங்கும் என்றால்..? தூணிலும்.. துரும்பிலும்..! இதுவும் அறிவோம் நாம்..! எங்கும் என்றால்.. எனக்குள்ளுமிருக்கிறான் இல்லையா என்று நாம் கேட்டுப் பார்த்ததில்லை ! எங்கும் என்றால் அவனுக்குள்ளும் இருக்கிறான் இல்லையா என்றும் நாம் கேட்டுப் பார்த்ததில்லை! எனக்குள் அவனுக்குள் இருந்தால் எல்லாருமே கடவுள் இல்லையா என்றும் நாம் சிந்தித்ததில்லை! இப்படி ஒரு சத்விசாரத்தில் இறங்கிப் பாருங்கள் .. கண்டிப்பாகக்.. கடவுள் உங்கள் கண்ணுக்குத் தெரிவார்!

நீரூற்ற வேண்டுகிறேன்!

146 ஆண்டுகள் கடந்துபோய் விட்டன! சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவப்பட்டு 146 ஆண்டுகள் கடந்துபோய் விட்டன! கல்லாய மனத்தையும் ஒரு கணத்தில் கனிவித்துப் பல்லோரும் அதிசயிக்க அருட்பக்குவம் தரும் மகா மந்திரத்தைத் தந்து 146 ஆண்டுகள் கடந்துபோய் விட்டன! அருட்பெருஞ்சோதி என்னும் ஒளிவடிவான ஒலி மந்திரம் அருளப் பெற்று 146 ஆண்டுகள் கடந்துபோய் விட்டன! அன்பு வேண்டும்! அன்பு கனிந்தால் அருள் தோன்றும்! அருள் ஜீவகாருண்யம் ஆகும் ! ஜீவ காருண்யம் பேரின்ப வீட்டின் திறவு கோலாகும்! என்று -- மனிதகுல வாழ்வுக்கு மகத்தான வழி கண்டு சொல்லி 146 ஆண்டுகள் கடந்துபோய் விட்டன! இப்போதுதான் ஏதோ ஒருசிலரின் இரும்பு விழித் திரைகள் திறக்கின்றன! அடைபட்டுக் கிடந்த இரும்புச் செவிகள் கேட்கின்றன! ஆம் --நாம் யோசிக்கத் தொடங்கி இருக்கிறோம்! ஆன்மாவைப் பற்றி ஒருகடவுள் பற்றி ஒளியே கடவுள் பற்றி உயிரே கடவுள் பற்றி ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைப் பற்றி ----- நிறைய யோசிக்கத் தொடங்கி இருக்கிறோம்! திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை என்னும் பெயரில் ஒரு குக் கிராமத்தில் இருந்து மக

தயவு செய்து....!

என்னதான் முயற்சி செய்தாலும் புறத்தில் காண முடியாது - கடவுளை! ஆன்மாவின் அகத்தில் விளங்கும் அகவெளியே அவன் ஆடல் செய்வதற்குரிய அரங்கமாக உள்ளது! அங்கே அவனைத் தரிசிக்கப் பிரியப் படுவோர்கள் அனைவர்க்கும் தேவைப் படுவது-- தயவு! தயவு செய்து உயிர்களிடம் தயவு காட்டுங்கள் மனிதர்களே.. !

உலகப் புரட்சியாளர்

இறைவன் எங்கும் இருக்கிறான் ! எங்கும் என்றால் - எல்லாப் பொருளிலும் இருக்கிறான்! இறைவன் இல்லாத இடம் -- எதுவுமில்லை! தூணிலும் உளன்-துரும்பிலும் உளன் அணுவினைச் சதகூறு இட்ட கோணிலும் உளன்! என்பான் கம்பன்! எங்கும் இருப்பவனை எங்கோ இருப்பவன் என்று எண்ணிவிட்ட அறியாமைதான் இந்தச் சமுதாயத்தின் சாபக் கேடு! கல்லிலும் சிற்பத்திலும் கர்ப்பக் கிரஹத்திலும் இறைவன் இருப்பதாய் நம்பும் மனிதர்கள் எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை மறந்து விடுகிறார்கள்! கீழ் மேல் என்று எந்த வேறுபாடும் கிடையாது-அவனுக்கு! உயிர்கள் அனைத்திலும் உறைகிறான் இறைவன் என்பதை உணர்ந்தவன் தனக்குள்ளும் இருக்கிறான் இறைவன் என்பதைத் தானே உணர்வான்! தனக்குள்ளும் இருப்பவன் பிறர்க்குள்ளும் இருப்பான் என்பதையும் பிழையின்றி உணர்வான். அந்தப் பிறர்- மனிதர் மட்டும் அல்லர்! விலங்குகள் -பறவைகள் சிற்றுயிர்கள் என்று எல்லா ஜீவராசிகளும் தான் என்பதையும் அவனே அறிவான்! அறிவானாயின்.. கையெடுத்துத் தொழக் கடவுளைத் தேடி- ஆலயம் செல்ல வேண்டாம் ! அங்கங்கும் தொழலாம் - அங்கங்கும் காணலாம் --! அவனுக்குப் பாலாபிஷேகம் செய்ய-

பசிநீக்கவந்த பரோபகாரி!

திருவருட் பிரகாச வள்ளலார் என்னும் துறவி பதினெட்டாம் நூற்றாண்டின் பரப்பளவில் அழுத்தமான அடையாளத்தை ஏற்படுத்திய - எழுச்சிகரமான மாமனிதர்! ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும்   திருமந்திர மொழியைத் தெளிவாக்கிய திருவருட்பா சீலர்! கடவுளை ஒளிவடிவத்தில்கண்ட உயரிய சன்மார்க்கி! மனிதனைப் பிளந்த மத மாச்சரியங்களை சொற்களால் பிளந்த சூத்திரதாரி! கலையுரைத்த கற்பனைகளை நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கங்கள் மண்மூடிப் போவதற்காக காடு மேடுகளைக் கடந்து வடலூரில் வதிந்து வாழ்வியல் போராட்டம் நடத்திய வார்த்தைச் சித்தர்! ஒன்பது வயதிலேயே உறுபொருள் கண்டு உலகச் சார்புகளை உடலாலும் உள்ளத்தாலும் நீத்துக் "கலகம்" செய்யவந்த காருண்ய மூர்த்தி! கைவீசி நடப்பதும் கூட காற்றில் உலவும் உயிர்களைக் காயப்படுத்திவிடலாம் என்னும் காரணத்தால் கைகளைக் கட்டியே நடந்த கருணைத் தென்றல்! ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்று சாவியைக் கையிலே வைத்துக் கொண்டு சமுதாயத்தைக் கெஞ்சிய சரித்திர புருஷர் ! சித்துகள் தெரிந்தாலும் மனிதச் சித்தங்களைத் திருத்தவந்த சித்தயோகி! அருளின் வடிவமான ஆன்மநேயி! அவ

என் மார்க்கம் சன்மார்க்கம்

என் மார்க்கம் பிறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்றார்--வள்ளலார்! இங்குப் -பிறப்புக்குப் பொருள் பிறவாமை என்பதாக எளியேன் கருதவில்லை! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றாரே வள்ளுவர்-- அந்தப் பிறப்பை ஒழிப்பதுதான் சன்மார்க்கம் என்கிறார் --வள்ளலார்! பிறப்பினால் கற்பிக்கப் பட்டிருக்கும் பேதங்களை ஒழிப்பதுதான் சன்மார்க்கம் ! அது தான் என்மார்க்கம்- என்கிறார்--பெருமான்! அதுவே நன்மார்க்கம் என்கிறேன் நான்! அதை வலியுறுத்தவே.. ஆகஸ்ட் 28 --ஆம்தேதி அடியேன் ஆரம்பிக்கப் போகும் திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை என்னும் கலை,இலக்கிய, ஆன்மிக,சமூக,சேவை நிறுவனம்! அதற்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யலாமே..! 500 -பேருக்கு மேல் அன்ன தானம் இட்டு ஆரம்பிக்கிறேன் விழாவை! அழைப்பிதழ் விரைவில் அனுப்பி வைக்கிறேன்! அன்புடன் , கவிஞர் கங்கை மணிமாறன் செல்:9443408824

"சிக்"கெனப் பிடிக்க......

நெற்றிக் கண்ணைத் திறப்பதற்கு ஒரு கதவும்,ஒரு பூட்டும் இருக்கிறது! அந்தப் பூட்டை  அருள் என்னும் திறவுகோலைக் கொண்டு திறக்க வேண்டும். அருள் என்பது.. ஆன்ம இயற்கையாகிய பெருந்தயவு என்கிறார்-- வள்ளல் பெருமான்! தயவுதான் நம்மை மனிதராக்கக் கூடியது! பசியே கூட இறைவன் அளித்த ஓர் உபகாரக் கருவி என்கிறார் பெருமான்! பசித்தாரைக் கண்டால் அருள் சுரக்கிறது. அருள் சுரந்தால் ஜீவகாருண்யம் பிறக்கிறது. ஜீவ காருண்யமே  மோட்ச வீட்டின் திறவுகோல் என்கிறார் -வள்ளலார். எந்த நெருடலும் இல்லாமல் நெஞ்சம் திறக்கிறதா இல்லையா..? வள்ளலார் நம்மை வாழ்விக்கவே வந்தவர் - நாம் தான் அவரைச் சிக்கெனப் பிடிக்கத் தெரியாமல் சீரழிந்துவிட்டோம்!